Simbu : மாநாடு வெற்றியால் சிம்பு படங்களுக்கு செம டிமாண்ட்... சம்பள விஷயத்தில் அதிரடி முடிவெடுத்த STR
மாநாடு படத்தின் வெற்றியால், இவர் அடுத்ததாக நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ போன்ற படங்களுக்கு கடும் டிமாண்ட் நிலவி வருகிறது.
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். தன் தந்தையை போலவே நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வரும் சிம்பு, தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு பின் குறிப்பிடத்தக்க வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வந்த சிம்புவுக்கு, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.
இப்படம் மூலம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் மாபெரும் வெற்றியை ருசித்துள்ள சிம்புவுக்கு, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் வெற்றியால், இவர் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’, ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் ‘பத்து தல’, கோகுல் இயக்கத்தில் நடிக்கும் ‘கொரோனா குமார்’ போன்ற படங்களுக்கு கடும் டிமாண்ட் நிலவி வருகிறது.
மேற்கண்ட படங்களின் வியாபாரமும் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தனது படங்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதை அடுத்து, இனி ஒப்பந்தமாகும் படங்களில் நடிக்க நடிகர் சிம்பு சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.