திருமணத்திற்கு தயாராகிறாரா ஸ்ருதி... மாப்பிளைக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சரிகா..!
அப்பா எட்டு அடி பாய்ந்தால்... பொண்ணு பதினாறு அடி பாய்வார் என்பதற்கு ஏற்றதுபோல், ஸ்ருதிஹாசன் அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு திரையுலகில் வளர்ந்து வருகிறார்.
மிகக் குறுகிய காலத்திலேயே அஜித், விஜய் என கோலிவுட் திரையுலகின் இரண்டு முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டு, தற்போது பாலிவுட் திரையுலகில் நடிப்பு திறமையை நிரூபிக்க போராடிக்கொண்டு இருக்கிறார்.
இவர் தமிழில் கடைசியாக நடித்து வந்த திரைப்படம் ‘சபாஷ் நாயுடு’ இந்தப் படத்தில் கமலுக்கு மகளாகவே நடிக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு தடங்கல்களை சந்தித்து வந்த இந்தப் படம் தற்போது படப் பிடிப்பு நடைபெறாமல் பாதியில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே சுருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக இருந்த படங்களும் சமீபகாலமாக வெளிவந்தது. இதற்கிடையே கமலஹாசன் கூட ஒரு முறை 'மைக்கேல் கார்சலை' லண்டன் சென்று சந்தார். ஆனால் இது மகளை சந்தித்தபோது அவருடைய நண்பரையும் சென்று சந்தித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நண்பர் மைக்கேல் கார்சலை தனது தாயார் சரிகாவிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரை சரிகா பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. இது, இந்தி ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுருதிஹாசன் விரைவில் மைக்கேலை திருமணம் செய்ய இருக்கிறார். அதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுபற்றி சுருதிஹாசனிடம் கேட்டபோது, “தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.