கொஞ்சம் கருணை காட்டுங்க, ப்ளீஸ்... அரசு மருத்துவர்களிடம் கெஞ்சும் பிரபல நடிகை..!
தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதியில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று அரசு மருத்துவர் சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என மருத்துவர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று பணிக்கு திரும்பாத மருத்துவர்களுக்கு பதிலாக மாற்று மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையையும் மீறி மருத்துவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவர்களின் இந்தப் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ’நீங்க மக்களை நோயாளியா பாக்குறீங்க. ஆனா, மக்கள் நாங்க உங்களை கண்ணுக்கு தெரிஞ்ச கடவுளா பாக்குறோம். உங்களுக்கு தொழில், எங்களுக்கு உயிர். உங்களுக்கு கோரிக்கை பிரச்சினை, மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை. கொஞ்சம் கருணை காட்டுங்க. மருத்துவர்களின் போராட்டம் முடிவுக்கு வர இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
அடுத்த பதிவில், ‘’அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றாலும் கூட, அதை நிறைவேற்றும் சக்தி அரசாங்கத்துக்கு தற்போது உள்ளதா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? இது பெரிய பிரச்சினை. ஒரு நாளில் தீராது. கிணறு வெட்ட பூதம் புறப்படும்- பூதம் அடங்கும் வரை வேலை நிறுத்தம் செய்தால் பாதிப்பு அனைவருக்குமே’’என அவர் தெரிவித்துள்ளார்.