Aryan khan : போதிய ஆதாரம் இல்லையாம்... போதைப்பொருள் வழக்கில் இருந்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விடுவிப்பு
Aryan khan : ஆர்யன் கானுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரது மகனான ஆர்யன் கான், கடந்தாண்டு மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் நடைபெற்ற போதை விருந்தில் கலந்துகொண்டார். அப்போது போலீசார் நடத்திய திடீர் ரெய்டில் ஆர்யன் கானும் சிக்கினார். அவருக்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி போலீசார் ஆர்யன் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார் ஆர்யன் கான். இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 6 ஆயிரம் பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஆர்யன் கான் உள்பட 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஆர்யன் கான் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். மேலும் குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் லிஸ்டில் இருந்த அவரது பெயரும் அதில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்யன் கான் உடன் மேலும் 5 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உதயநிதி விலகும் சமயத்தில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த பாஜக அண்ணாமலை... முதல் படத்திலேயே இப்படி ஒரு ரோலா?