சார்பட்டா பரம்பரையில் அருணாச்சலம், எம்.எம்.முருகேசன், டி.டி.மாசி போன்றவர்கள் டாப்பில் இருந்தை தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கி 1990 வரை வடசென்னையில் ரோஷமான குத்துச்சண்டை போட்டி மிகவும் பிரபலமாக இருந்தது. சார்பட்டா பரம்பரை படத்தை பொறுத்தவரை வடசென்னையில் சார்பட்டா மற்றும் இடியாப்ப பரம்பரைகளுக்குள் நடக்கும் குத்துச் சண்டை குழுக்களுடையே நிலவும் பகை தான் கதை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த ரங்கன் வாத்தியாருக்கு, இடியாப்ப பரம்பரை சவால் விடுக்கிறது. அந்த சவாலை ரங்கன் வாத்தியார் எதிர்கொள்வதற்கு உதவும் சிஷ்யனாக வருகிறான் கபிலன். இரு குழுக்களிடையிலான இந்தப் பந்தையத்தில் இறுதியாக ஜெயிப்பதற்கு முன்பாக கபிலன் எதையெல்லாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்பதே படம். 

சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில், வடசென்னை பாக்ஸிங் கலாச்சாரம், பாரம்பரைகளுக்கு இடையிலான போட்டி உள்ளிட்டவை குறித்து பல்வேறு சுவாரஸ்யமான செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. எல்லப்ப செட்டியார் பரம்பரையைச் சேர்ந்த கே.ஜி. சண்முகம் என்கிற Knockout சண்முகம் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

1969-யில் இருந்து சண்டையில் ஈடுபட்டு வந்தது, பாக்ஸிங் போட்டிகள் எப்படி நடக்கும், சென்னை சிட்டிக்குள் எப்படி சண்டை நடைபெறும், பரம்பரைகளுக்கிடையே நடந்த போட்டி என பல்வேறு விஷயங்களையும் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். சார்பட்டா, சதுர்சூர்ய சார்பட்டா, இடியப்ப நாயக்கர், எல்லப்ப செட்டியார், சுண்ணாம்புக் கால்வாய் பரம்பரை என்று நாலைந்து பரம்பரைகள் இருந்தன. ஆனால், சார்பட்டாவும் சதுர் சூர்யாவும் மோத மாட்டார்கள். அதுபோல இடியப்ப நாயக்கரும் எல்லப்ப செட்டியாரும். அப்படிப் பார்க்கும்போது இரண்டு பரம்பரைகளுக்கு இடையில்தான் போட்டி எனத் தெரிவித்துள்ளார். 

சார்பட்டா பரம்பரையில் அருணாச்சலம், எம்.எம்.முருகேசன், டி.டி.மாசி போன்றவர்கள் டாப்பில் இருந்தை தெரிவித்துள்ளார். அதில் மிகவும் டாப்பில் இருந்த சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த டி.டி.மாசி என்பவரை தான் இரண்டே டவுன்டில் நாக்அவுட் செய்ததாகவும், கடைசியாக சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை வெற்றி பெற்றதாகவும், அத்துடன் அவர் பாக்ஸிங்கை விட்டே விலகிவிட்டார் என நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார். ஆக சினிமாவில் காட்டுவது போல் சார்ப்பட்டா பரம்பரையில் திறமையான பல வீரர்கள் இருந்தாலும், இறுதியாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என தெரிவித்துள்ளார்.