நான் தப்பா பேசல... தப்பா புரிஞ்சுகிட்டாங்க - சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த சாய் பல்லவி - வைரலாகும் வீடியோ
Sai Pallavi : தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டு சர்ச்சையானது மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும், இந்த சமயத்தில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விராட பருவம் என்கிற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் அவர் நக்சலைட்டாக நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிகளின் போது நடிகை சாய் பல்லவி சொன்ன கருத்து ஒன்று பெரும் சர்ச்சையாக வெடித்தது.
அதில் காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், இங்கு மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி தாக்குதல் நடத்தியதும் என்னைப் பொருத்தவரை ஒன்றுதான். மதத்தின் பேரால் எந்தவொரு மனித உயிரும் போகக் கூடாது, யாரும் துன்புறுத்தப்படக் கூடாது என்கிற கருத்தை முன்னிறுத்தி நடிகை சாய் பல்லவி அவ்வாறு பேசி இருந்தார்.
இது சர்ச்சையானது. அவருக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பினர். மறுபுறம் அவரது இந்த வெளிப்படையான பேச்சுக்கு ஆதரவும் கிடைத்தது. கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்த இந்த விஷயம் குறித்து நடிகை சாய் பல்லவி தற்போது விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : “நான் இடதுசாரியும் இல்லை, வலதுசாரியும் இல்லை, நடுநிலையானவள். நான் எதுவும் தப்பா பேசல, ஆனால் அதை தவறாக புரிஞ்சுகிட்டாங்க. எந்த ஒரு உயிரும் மதம், மொழி, இனம், ஜாதி போன்ற வேறுபாட்டிற்காக பறிக்கப்படவோ, துன்புறுத்தப்படவோ கூடாது என்பதை தான் நான் கூறினேன். அது தவறாக சித்தரிக்கப்பட்டு சர்ச்சையானது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என நடிகை சாய் பல்லவி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... அங்க காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது தான்... இங்க இஸ்லாமியர்களுக்கும் நடந்திருக்கு- புயலை கிளப்பிய சாய் பல்லவி