படப்பிடிப்பு நிறுத்தத்தால்... ரூ.1,000 கோடி முடக்கம்..! அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர் சங்க செயலர்!
பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுமார் ரூ.1000 கோடி முடக்க பட்டுள்ளதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுமார் ரூ.1000 கோடி முடக்க பட்டுள்ளதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசு அறிவிக்கும் வரை படப்பிடிப்புகளை நடத்த கூடாத என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்த பின், அரசு அனுமதிக்கும் போது படப்பிடிப்பு பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய், விக்ரம், சூர்யா, கமல், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களின் பணிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது "சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த அமைச்சரிடம் வேண்டினோம். ஆனால் கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நிலையில், முதல்வர் அறிவித்துள்ள ஊரடங்கை தமிழ் திரையுலகமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊரடங்கு காலத்தில் திரைத்துறை சார்ந்த எந்த பணிகளையும் செய்வதில்லை என முடிவு எடுத்துள்ளோம். கொரோனா பரவல் குறையும் போது, அரசு அறிவிக்கும் தளர்வுக்கு பின் திரைப்பட பணிகள் தொடரும்" என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனாவின் முதல் அலை தலை தூக்கிய போது, அதிகம் பாதிக்கப்பட்ட திரைதிரையினர், மீண்டும் இரண்டாவது அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று தணிந்த பிறகே படப்பிடிப்பு பணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.