சமந்தா, தனுஷ், டி.இமான் என சமீபகாலமாக பிரபலங்கள் விவாகரத்து முடிவை அறிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை தனது காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

திரைப்பிரபலங்களின் விவாகரத்து என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு நடிகை சமந்தா தனது காதல் கணவரை விவாகரத்து செய்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து இசையமைப்பாளர் டி.இமானும் விவாகரத்து முடிவை அறிவித்தார். கடந்த மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து செய்வதாக கூறி ஷாக் கொடுத்தனர். இது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை தனது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார். பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை ராக்கி சாவந்த் (Rakhi Sawant) தனது காதல் கணவரை பிரிவதாக காதலர் தினத்தன்று அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். அண்மையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்நிலையில், நடிகை ராக்கி சாவந்த் (Rakhi Sawant) விவாகரத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அன்புள்ள ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால், நானும் ரித்தேஷும் பிரிய முடிவு செய்துள்ளோம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல்வேறு விஷயங்கள் நடந்தன. அதில் பல விஷயங்கள் எல்லைமீறி சென்றுவிட்டன. நாங்கள் அதை சரிசெய்ய முயற்சித்தோம். இருப்பினும் முடியவில்லை, அதனால் இருவரும் பிரிவது தான் சிறந்தது என நினைக்கிறேன். இனி இருவரும் எங்கள் வாழ்க்கையை தனித்தனியாக அனுபவிக்க போகிறோம்.

காதலர் தினத்தில் இப்படி நடப்பது சற்று மன வருத்தத்தை தருகிறது. ரித்தேஷ் அவரது வாழ்க்கையில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் இந்த கட்டத்தில் நான், எனது வேலை மற்றும் என் வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளேன். என்னை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க போகிறேன். எப்போதும் என்னைப் புரிந்துகொண்டு ஆதரவளிப்பதற்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.