பிரபல தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பனுக்கு, ரஜினிகாந்த் மற்றும் பாரதி ராஜா அஞ்சலி!
தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாகவும், திரைபடத்துறையில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஆர் எம் வீரப்பன் தன்னுடைய 98 வது வயதில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில்... அவருக்கு தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அண்மையில் உடல் நலம் இன்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர் எம் வீரப்பன், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவருடைய உடல் தி நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் தொண்டர்கள், பிரபலங்கள், குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆர்.எம்.வீரப்பன் ஒரு தயாரிப்பாளர் என்பதால், அவருடைய தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மூன்று முகம், பணக்காரன், பாட்ஷா, தங்க மகன், ஆகிய படங்கள் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. ஆர்.எம். வீரப்பனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஞ்சலி செலுத்திய பின்னர்... பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது "ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து, நம் அனைவரையும் விட்டு பிரிந்துள்ளார் உத்தமர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை, என அனைத்திலும் அவரது வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் சார். அவரால் உருவாக்கப்பட்ட பலர் இன்று மத்திய, மாநில அமைச்சர்களாகவும், கல்வி நிறுவனங்களின் அதிபர்களாகவும்... பேருடனும் புகழுடனும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்தின் பின்னால் சென்றவர் கிடையாது. கடமை கட்டுப்பாடு என தன்னுடைய கொள்கையில் குறியாக இருந்தவர். அண்ணா சொன்ன அனைத்து கோட்பாடுகளையும் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்து வந்தார். எனக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருந்த நட்பு மிகவும் ஆழமானது. உணர்ச்சிகரமானது. புனிதமானது என தெரிவித்தார். மேலும் இப்போது அவர் நம்முடன் இல்லை என்பதால் நான் இதை சொல்லவில்லை, என் வாழ்நாளில் நான் அவரை மறக்கவே முடியாது. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
இதை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.. "அறநிலையத்துறையை ஆண்ட மனிதர். சதம் தொட்ட தனித்துவமானவரின் மறைவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒளிர்ந்து மறைந்த நட்சத்திரத்தின் ஆயுள் போன்றது. திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான திரு.ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து, எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பல நட்சத்திரங்களுடன், தமிழ்த்திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்து, சிறந்த தயாரிப்பாளராக, அவர் தலைமையில் பல ஆச்சரியங்களை நிகழ்த்திக் காட்டியது சத்யா மூவிஸ். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்தவர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். ஒவ்வொரு நாளும் வேறொரு நாள் தான். நமக்கான நாளாக நாளை அமைய துளி கூட வாய்ப்பில்லை. ஆனாலும் நம்பிக்கை என்பது மட்டுமே நம்மை வாழச் சொல்கிறது. நாளை என்ற நம்பிக்கையை விதைத்துச் சென்ற தங்களின் வாழ்க்கையை முன் வைத்துக் கொள்கிறோம். நிகழ்வின் ஒவ்வொரு பொழுதிலும் எங்களை நினைவுபடுத்திய சத்யா மூவிஸைப் போல உங்களின் நினைவுகளும் நீடித்திருக்கும். வாழ்ந்திருங்கள் ... எத்தனை வருடங்கள் கடந்தாலும். என தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் முதல், இளையராஜா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள், ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு நேரில் வந்து தொடர்ந்து தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ADMK
- RIP RM Veerappan
- RM Veerappan
- RM Veerappan Death
- RM Veerappan Latest
- RM Veerappan death cause
- RM Veerappan death news
- RM Veerappan dies in Chennai
- RM Veerappan latest news
- RM Veerappan passes away
- RM veerappan death
- Senior Leader Veerappan
- bharathi raja
- bharathi raja tribute
- politician rm veerappan
- producer rm veerappan
- rajinikanth
- rajinikanth tribute