மோடி பாணியில் கலக்கிய ரஜினி... விருதை பெற்று உருக்கம்..!
கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதை முன்னிட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்ட நிகழ்வு இந்திய அளவில் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன.
கோவாவில் நடைபெறும் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நவம்பர் 20 தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில் அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதும், ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட ரஜினி, முதலில் ஆங்கிலத்தில் பேசிவிட்டு, ‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நன்றிகள்’என்றும் அவர்களுக்கு விருதை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்களும், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 படங்களும் திரையிடப்படவுள்ள இந்த விழாவை நடத்துவது மத்திய அரசு என்பதும், இவ்விழாவில் பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு மற்றும் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஹவுஸ் ஓனர் ஆகிய 2 படங்களும் திரையிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மோடி தமிழகம் வந்தால் தமிழில் பேசி விட்டு ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுவார். ஆனால் ரஜினி மோடி பாணியை பின்பற்றி ஆங்கிலத்தில் பேசிவிட்டு தமிழில் பேசி அசத்தி இருக்கிறார்.