முதல் அறிமுகத்திலேயே என்னை வசீகரித்துவிட்டார் ரஞ்சித்; ரஜினி புகழாரம்
கபாலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து , இயக்குனர் ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ”காலா”. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு இரு தினங்களுக்கு முன் சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவின் போது, ரஜினி தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்ததுடன் ,ரஞ்சித் உடனான இந்த புதிய பயணம் குறித்தும் ரசிகர்களிடம் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
ரஞ்சித்தை குறித்து பேசும் போது , கபாலி படத்திற்கான கதையை கூற வந்த போது முதல் தோற்றத்திலேயே என்னை வசீகரித்துவிட்டார் ரஞ்சித் என ரஜினி குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொரு திரைப்படத்தையும் தனக்கு கிடைத்திருக்கும் புதிய வாய்ப்பாக கருதி ரஞ்சித் அதற்கு கொடுத்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் புகழ்ந்தார் ரஜினி.
தன்னுடைய முன்னேற்றத்தை மட்டும் கருதாமல், தன்னுடன் இணைந்து சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும். என்ற ரஞ்சித்தின் எண்ணத்தையும் முயற்சியையும் பாராட்டிய ரஜின,. எந்த சூழலையும் சமாளித்து விரைவில் படப்பிடிப்பை நிகழ்த்துவதில் கே.எஸ்.ரவிகுமார் போலவே திறமையான இயக்குனர் ரஞ்சித் என்றும் தெரிவித்தார். காலா இசை வெளியீட்டு விழா மேடையில் ரஜினி பொழிந்த இந்த பாச மழையில் ரஞ்சித் திணறிவிட்டார்.