Pushpa :தப்பாக தமிழ் பேசினாலும் இது தான் அழகு..தமிழன் என அடுத்தடுத்து மார் தட்டும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ்..
pushpa press meet : ஆர்ஆர்ஆர் பட நாயகர்கள் ராம்சரண், என் டிஆர் உள்ளிட்டோர் தங்களை தமிழன் என அடையாளப்படுத்தியிருந்ததை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனும் 20 வயது வரை தமிழ்நாட்டில் தான் வளர்ந்தேன். நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன் என கூறியுள்ளார்.
'புஷ்பா : தி ரைஸ்' படத்தின் முதல் பாகம், டிசம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்து, சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழகத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது. ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில், அனசுயா பரத்வாஜ் மற்றும் அஜய் கோஷ் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. படத்திற்கான தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா படக்குழுவின் கடின உழைப்பால் ஈர்க்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், அதன் முக்கியமான 35-40 உறுப்பினர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, அனைத்து தயாரிப்பு பணியாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ரொக்க பரிசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்த அல்லு அர்ஜுன்... பத்திரிக்கையாளர்களிடையே பேசுகையில் இவர் ; தமிழ்நாட்டில்தான் பிறந்தேன். 20 வயது வரை தமிழ்நாட்டில் தான் வளர்ந்தேன். நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் பேசும் தமிழ் தப்பாக இருந்தாலும், தமிழ் பேசுவது தான் அழகாக இருக்கும். புஷ்பா திரைப்படம் 4 படத்துக்கு சமம். சாமி சாமி பாடல் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசத்தே காரணம். பாடல் வெற்றி பெற்றதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் புஷ்பா படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். தெலுங்கு பேசும் தமிழ் பையன் நான்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆர் ஆர் ஆர் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராம் சரண் தன்னை தமிழன் என பிரதிபலித்தார். அதோடு என்டிஆர் தமிழில் பேசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.