முதல்வருக்கு முக்கிய கோரிக்கையோடு... தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட திடீர் அறிக்கை!
கலைமாமணி விருது பெற்ற பிரபலங்களுக்கு வாழ்த்துகளோடு முக்கிய கோரிக்கை ஒன்றையையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வைத்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் கலை பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், தொன்மையான கலை வடிவங்களைப் பேணி காப்பதற்காகவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இயல், இசை, நாடக மன்றத்தால், 1959 ஆம் ஆண்டில் இருந்தே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது பெற்ற பிரபலங்களுக்கு வாழ்த்துகளோடு முக்கிய கோரிக்கை ஒன்றையையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வைத்துள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'அரசு அறிவித்துள்ள கலைமாமணி விருது பெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்கத்தின் முன்னாள் தலைவரும் பிலிம் பெடரேஷன் தலைவருமான கலைபுலி எஸ்.தாணு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மனோஜ்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், ஜாக்குவார்தங்கம், நடிகரும், தயாரிப்பாளருமான, ராமராஜன், சிவகார்த்திகேயன், ஆகியோருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் கலைமாமணி விருது பெறும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கொண்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதல்வர் அவர்களுக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களுக்கும், இயல் இசை நாடக மன்ற தலைவர் தேவா அவர்களுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு,2015 ,2016, 2017 ஆண்டு கணக்கான மானியத்திற்கு விண்ணப்பித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் மானியத்தை வழங்கி, அந்த தயாரிப்பாளர்களின் வாழ்வில் உள்ள இருளை நீக்கி வெளிச்சம் கொடுக்குமாறு தமிழக முதல்வர், துணை முதல்வர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோரிடம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இருகரம் குவித்து கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.