சைக்கோ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து நீடித்து வரும் சிக்கலுக்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

நடிகர் உதயநிதியை வைத்து இயக்குனர் மிஷ்கின் எடுத்துள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி சைக்கோவாக நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் அடுத்த வாரம் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்திற்கு தற்போது தான் சென்சார் செர்டிபிகேட் கிடைத்தது. சைக்கோ எனும் பெயரை மாற்றினால் தான் சர்டிபிகேட் என்று தணிக்கை குழு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. படத்தை பார்த்துவிட்டு முடிவுக்கு வருமாறு மிஷ்கின் கூற அதையும் செய்த தணிக்கை குழு நோன் சான்ஸ் என்றுவிட்டது. இதனால் ரிவைசிங் கமிட்டிக்கு மிஷ்கின் சென்றுள்ளார். அங்கும் நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது ஏ சான்றிதழுடன் சைக்கோ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். இதனால் படம் விடுமுறை எல்லாம் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சைக்கோ என்கிற பெயருடன் படம் வெளியாவது எதிர்மறையாக இருப்பதாகவும், சைக்கோ குணத்துடன் உள்ள ஒருவனை ஹீரோ போல உருவகப்படுத்துவது சமுதாயத்திற்கு நல்லது இல்லை என்று கூறி படத்திற்கு தணிக்கை சான்று அளிக்க மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரிவைசிங் கமிட்டிக்கு மிஷ்கின் சென்று படத்திற்கு அதே பெயருடன் சான்றிதழ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு மெண்டல் ஹை கியா என்று கங்கனா நடித்த படத்திற்கும் இதே போன்ற பிரச்சனை வந்தது. மெண்டல் என்கிற தலைப்புடன் படத்தை அனுமதிக்க தணிக்கை குழு மறுத்த நிலையில், ரிவைசிங் கமிட்டியும் கைவிரித்தது. இதனை தொடர்ந்து ஜட்ஜ்மெண்டல் ஹை கியா என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. இதே போல் சைக்கோவுக்கும் படத்தின் பெயரை மாற்றினால் தான் முடியும் என்றார்கள். ஆனால் ரிவைசிங் கமிட்டியில் பிரச்சனை எளிதாக முடிந்துள்ளது.

அதே சமயம், உதயநிதி திமுக இளைஞர் அணிச் செயலாளராக பதவி ஏற்ற பிறகு வெளியாக உள்ள அவரது முதல் படம் சைக்கோ தான். தேர்தல் பிரச்சாரங்களில் அதிமுகவை விமர்சிப்பதை விட உதயநிதி மோடியைத் தான் அதிகம் கலாய்த்து வருகிறார். இதனை கவனித்த பாஜக ஆதரவு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் தான் அவர் படத்திற்கு சிக்கலை உருவாக்கி வருவதாக கூறுகிறார்கள்.