தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு நாள் மழைக்கே சென்னை முடங்கிவிட்டதாக தெரிவித்தார்.
கோடைக்காலத்தில் நீர் இல்லை என கூறும் அரசு, எந்தவித தொலைநோக்கு பார்வையோடு இல்லாமல் உள்ளதாக கூறினார். புழல் ஏரி உடையும் அபாயத்தில் உள்ளது என்பதை கேள்விபடும் போதும் நெஞ்சம் பதறுவதாகவும், நீர் நிலைகளை தூர்வராமல், தடுப்பணைகள் இல்லாமல் இருப்பது அரசின் அலட்சியத்தை காண்பிப்பதாக தெரிவித்தார்.

பால்,மின்சாரம் இல்லாமல் ஒட்டு மொத்த சென்னையே பாதித்துள்ளதாக கூறிய அவர் ,10 நாட்கள் தொடர்ந்து மழை பெய்து இருந்தால் சென்னையின் நிலமை என்னாவாகி இருக்கும் என கேள்வி எழுப்பினார். மழை நின்ற உடன் அரை மணி நேரத்தில் மழை நீர் வடிந்துவிடும் என மேயர் கூறியதாகவும், ஆனால் 4 நாட்கள் ஆகியும் மழை நீர் வடியாமல் இருப்பதாக தெரிவித்தார். கடல் மழை வெள்ளத்தை உள்வாங்கவில்லை என்பதை ஏற்க்க முடியவில்லை என்றும், மக்கள் தொடர்ந்து சிரமம் பட்டுக்கொண்டுதான் இருக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.

பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை நன்றாக இருப்பதாகவும், இன்னும் ஒரிரு நாளில் நல்ல செய்தி கிடைக்கும் என தெரிவித்தார்கள். அதாவது இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
