பணம் வாங்கும் பிணமாகவோ.. கருத்து சொல்லும் சவமாகவோ ஆகவில்லை! மாற்று திறனாளி ரசிகரால் நெகிழ்ந்த பார்த்திபன்!
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னால் முடிந்தவரை சாப்பாடு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து வரும் பார்த்திபன்... மாற்றுத்திறனாளி ரசிகரின் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார்.
'மிக்ஜாம்' ஆடிய கோர தாண்டவத்தால்... சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சகஜ நிலை திரும்ப இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என கூறப்படும் நிலையில்... மழை வெள்ளம் வீட்டிற்குள் புகுந்துள்ளதால், சென்னை மக்கள் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர்.
மக்களுக்கு தேவையான உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு ஒருபுறம் வழங்கி வந்தாலும்... சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் ஆகியோரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்கள் இருக்கும் இடங்களுக்கு தேடி சென்று கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நந்தகுமார் என்கிற மாற்றுதிறலானி ஒருவர், நடிகரும் - இயக்குனருமான பார்த்திபன் செய்து வரும் உதவிக்கு அவரை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்த கடிதத்திற்கு... அழகிய வரிகளால், நெகிழ்சியுடன் பதிலளித்துள்ளார் பார்த்திபன். இதுகுறித்து பார்த்திபன் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது...
"இந்த நந்தகுமார் அவர்களிடம் அலைபேசியில் அழைத்து ‘அகில உலக கடவுள்’ இது வரை கேள்விப் படாதக் கடவுள் எனப் பாராட்டினேன்.மாற்றுத் திறனாளி ஒருவர் உடனடியாக அதுவும் கடிதம் மூலம் வாழ்த்தியது மகிழ்வே!சத்தியமாக எந்தக் கட்சியிடமும் பணம் வாங்கும் பிணமாகவோ,வாங்கிய காசுக்குக் கருத்து சொல்லும் சவமாகவோ ஆகவில்லை நான்!என் எழுத்து ஒரு கட்சியை சார்ந்த நண்பர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது அதற்கான அவர்களின் நியாயமும் உணர்கிறேன்,வருந்துகிறேன்.
ஆனால் நான் மக்கள் கட்சி. ‘நாம்’என்ற மக்களுக்காவே பேசுகிறேன். “அவரை ஏன் கேட்கவில்லை, இவரை ஏன் கேட்கவில்லை?” என்போர்க்கு சொல்கிறேன். எவரைக் கேட்டாலும் இதற்கு ஒரு தீர்வு உடனே கிடைக்காது என்பதை நானறிவேன். கேட்டால் நன்மை விளையுமெனின் விளைவை பற்றி கவலையின்றி கேட்பேன். நாம் அனைவருக்கும் பொதுவான நன்மை பற்றி, நாளையாவது நடக்க வேண்டுமே என்ற சராசரி மனித ஆதங்கத்தில் எழுந்தது/எழுதுவது.
இரவில் வாங்கிய நம் இந்திய சுதந்திரம் கூட, கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எங்கோ ஒரு மூலையில் யாரோ சிலர் மூட்டிய தீப்பொறி. புரட்சி வெடித்த தேதியை தான் நாம் சரித்திரத்தில் புரட்டிப் பார்க்கிறோம்.அது சூல் கொண்ட நொடிகள் நூறாயிரம் இருக்கும். எனவே, கனவே ஆயினும் நனவாகும் என நம்புவோம். இப்போதைக்கு வியாசர்பாடி போன்ற பல பகுதிகளுக்கு உணவும் உதவியும் தேவையென கோரிக்கை வந்த வண்ணம் இருக்கிறது.அதை நான் பார்க்கிறேன்.என் நல்லெண்ணத்தை மட்டும் புரிந்துக் கொண்டு,நீங்கள் செய்துக் கொண்டிருக்கும் உதவிகளை நீங்களும் தொடருங்கள்!!! என தெரிவித்துள்ளார்.