Prakash Raj Name Removed From Voter List : நடிகர் பிரகாஷ் ராஜ், தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோனதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். SIR எனக் குறிப்பிடப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது, தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவிலேயே பிறந்து, அங்கேயே தனது கல்வியையும் முடித்ததாக கூறியுள்ள பிரகாஷ் ராஜ், இந்த விவகாரத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது வாக்காளர் அடையாளத்தை மீண்டும் பெறுவதற்கு என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்பதைப் பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள பிரகாஷ் ராஜ், தனது பதிவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரின் வாக்குரிமையைத் தடுக்க முடியும் என்றாலும், அந்த அதிகாரத்திற்கு எதிரான மக்களின் குரலைத் தடுக்க முடியுமா என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரத்தில் இருப்பவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கான உரிமையை மக்களிடமிருந்து பறிக்க முடியும் என்று நினைத்தாலும், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றும் ஜனநாயக சக்தியைத் தடுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ

இந்த விவகாரம் தொடர்பாக பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறியிருப்பது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் பிரகாஷ் ராஜ் மீது பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக 2019-ல் வழக்கறிஞர் திலீப் குமார் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்ததாக அந்தப் புகாரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறிய புகார்தாரர், பின்னர் நீதிமன்றத்தை நாடியதாக கூறி இருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் பிரகாஷ் ராஜ் ஆஜராகும்படி இருமுறை அழைப்பாணை அனுப்பியதாகவும், அவர் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவைப் பொறுத்தவரை, பிரகாஷ் ராஜ் தற்போது சில முக்கிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்த தனது வெளிப்படையான கருத்துகளாலும் அவர் அடிக்கடி கவனம் பெற்று வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களிலும் அவர் பங்கேற்றார், ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது வாக்குரிமை தொடர்பாக அவர் தற்போது முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Scroll to load tweet…