Prabhudeva: ஹீரோயினாக நயன்தாரா.... ஹீரோவாக பிரபுதேவா - பரபரப்பாகும் பாலிவுட்
இந்தியில் ‘வாண்டட்’, ‘ஆக்சன் ஜாக்சன்’, ‘ரவுடி ரத்தோர்’, ‘தபாங்’, ‘ராதே’ என பல்வேறு ஹிட் படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா தற்போது முதல் முறையாக நாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நயன்தாரா பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள இந்த சமயத்தில், அவரின் முன்னாள் காதலர் பிரபுதேவாவும், அங்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதன்படி அவர் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் பாலிவுட் படத்துக்கு ஜர்னி என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை ஆஷிஷ் குமார் துபே இயக்க உள்ளார். அஞ்சும் ரவி மற்றும் ஆஷிஷ் குமார் துபே ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பை ஆக்ரா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடத்த உள்ளார்களாம்.
தமிழில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபுதேவா, இந்தியில் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இவர் ஏற்கனவே இந்தியில் ‘வாண்டட்’, ‘ஆக்சன் ஜாக்சன்’, ‘ரவுடி ரத்தோர்’, ‘தபாங்’, ‘ராதே’ என பல்வேறு ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.