இவ்வளவு சீக்கிரமா?... “பொன்னியின் செல்வன்” ஷூட்டிங் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்...!
தற்போது கொரோனா பிரச்சனைகள் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.
கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், த்ரிஷா, பிரபு, சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. அங்குள்ள அடந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரண்மனை போல் செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது.
உலகம் முழுவதும் தீயாய் பரவிய கொரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்காக ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு அடித்து பிடித்து தாயகம் வந்து சேர்ந்தது. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் இணைந்து 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது கொரோனா பிரச்சனைகள் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதில் விக்ரம் “ஆதித்த கரிகாலன்” என்ற கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராய் “மந்தாகினி” மற்றும் “நந்தினி” என்ற இரட்டை வேடத்திலும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகின.
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 5 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் இவ்வளவு சீக்கிரமாக நிறைவடைந்துவிடுமா? என்ற ரசிகர்கள் சந்தேகமடைந்தாலும், எழுத்து வடிவில் பார்த்த கதாபாத்திரங்களை உயிரோட்டத்துடன் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை.