சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... ஓ.என்.வி. விருதை திருப்பிக் கொடுத்த வைரமுத்து...!
கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓ.என்.வி. விருதை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மிகவும் உரிய இலக்கியத்திற்கான விருதான ஓஎன்வி விருது இந்த முறை மலையாள மண்ணைச் சாராத கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது. கேரளாவின் உயரிய விருதுக்கு தமிழ் கவிஞர் பரிந்துரைக்கப்பட்ட செய்தி அறிந்து தமிழ் திரையுலகினர் முதல் தமிழக முதலமைச்சர் வரை வைரமுத்துவிற்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
இந்நிலையில் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாடகி சின்மயி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். அவருக்கு ஆதரவாக மலையாள திரையுலகைச் நடிகை பார்வதி, இயக்குநர் அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 18 பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்டுக்கும் கேரளாவின் மிகப்பெரிய கெளவுரவமான ஓஎன்வி விருதை வழங்குவதாக என கண்டன குரல்கள் எழுந்தது.
இதையடுத்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது. இந்த முடிவுக்கு பாரதிராஜா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓ.என்.வி. விருதை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளார். விருதுப்பணம் 3 லட்சத்துடன் 2 லட்சம் சேர்த்து ரூ.5 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.