RRR: என்னது ரிலீஸ் லேட் ஆகுமா? தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள் - ஆந்திராவில் பரபரப்பு..!
RRR: ரசிகர்கள் ஆர்வத்தில் திரையை எதுவும் செய்து விட கூடாது என்பதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் திரைக்கு முன் வேலி அமைத்தனர்.
பாகுபலி 2 திரைப்படத்திற்கு பின் இயக்குனர் ராஜமவுலியின் பிரம்மாண்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர். இன்று உலகம் முழுக்க பல்வேறு திரையரங்குகளில் ரிலீசானது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக பல முறை ஆர்.ஆர்.ஆர். வெளியீடு தாமதமான நிலையில், இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது. இதுதவிர பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி, தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடத்து இருப்பது என பல ஸ்பெஷல் அம்சங்களால் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு துவக்கம் முதலே ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது.
ரசிகர்கள் ஆரவாரம்:
இந்த நிலையில், இன்று ரிலீஸ் தேதி என்பதால் ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரித்து, ஆர்.ஆர்.ஆர். போஸ்டர், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். கட்-அவுட்களுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் என ஆர்.ஆர்.ஆர். படத்தை ரிலீசுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பே கொண்டாட துவங்கி விட்டனர். ஆர்.ஆர்.ஆர். முதல் ஷோ துவங்கும் வரை பட்டாசு வெடித்து, மேல தாளங்களுடன் ஆடி ரசிகர்கள் ஆரவாரம் செய்து வந்தனர்.
இதே காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் காணப்பட்டது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் அன்னப்பூர்னா திரையரங்கிலும் ரசிகர்கள் இதே போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். முன்னதாக ரசிகர்கள் ஆர்வத்தில் திரையை எதுவும் செய்து விட கூடாது என்பதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் திரைக்கு முன் வேலி அமைத்தனர். இத்தனை ஆர்ப்படங்களுக்கு மத்தியில் அன்னப்பூர்னா திரையரங்கில் மட்டும் முதல் ஷோ போட சற்று தாமதமாகி விட்டது.
அடாவடி:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆர்.ஆர்.ஆர். திரையிடலில் தாமதம் ஆகும் என அந்த தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கோபமடைந்து தியேட்டரில் அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றி, ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கத் தொடங்கினர். கையில் கத்தியுடன் ஒருவர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த நிலையில், சிலர் ஜன்னலில் ஏறி காலால் உதைத்தே கண்ணாடிகளை உடைத்தனர்.
இந்த சம்பவத்தை திரையரங்கினுள் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளனர். தியேட்டரை சேதப்படுத்தியவர்களை காவல் துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்து சென்றனர். ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் தாமதம் ஆனதால், ரசிகர்கள் தியேட்டரை சேதப்படுத்திய விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.