செம்ம தில்லு! கள்ளச் சா…. வுக்கு எதுக்கு? கள்ளக்குறிச்சி விஷச்சாராய நிவாரணத்தை விமர்சித்த பார்த்திபன்!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம் நிவாரண நிதி என கேள்வி எழுப்பியபடி பார்த்திபன் போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருனாபுரம் பகுதியில், விஷச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே கிராமத்தை சேர்ந்த பலர் அடுத்தடுத்து உயிர்விட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளாக வெளியாகும் தகவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் முதல் ஆளாக அறிக்கை விட்டு... திமுக கட்சியை சாடிய தளபதி விஜய், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு விரைந்த தளபதி விஜய் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறியது மட்டும் இன்றி, இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விஜய்யை தொடர்ந்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற பலர் கள்ளக்குறிச்சிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என அறிந்தார். அதே போல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு குறித்து தான் தற்போது நேரடியாகவே திமுகவை விமர்சிக்கும் விதத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார், நடிகர் பார்த்திபன். அந்த பதிவில், கள்ளச் சா…. வுக்கு எதுக்கு நல்லச் சாவு (10 L) ? என நறுக்கென போட்டுள்ளதற்கு பலர் செம்ம தில்லாக கேள்வி எழுப்பிய பார்த்திபனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.