Karthik Subbaraj New Movie : தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு, பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "பீட்சா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், எழுத்தாளராகவும் களமிறங்கியவர் தான் கார்த்திக் சுப்புராஜ்.
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில், நல்ல பல படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக பயணித்து வரும் கார்த்திக் சுப்புராஜ், இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "பேட்ட" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் கார்த்திக் சுப்புராஜ் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பதை பொதுமக்களுக்கு அறிவித்த ஒரு படமாகவும் திகழ்ந்து வருகிறது.
அதை தொடர்ந்து தொடர்ச்சியாக பல திரைப்படங்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டில் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" என்கின்ற திரைப்படம் வெளியானது. எஸ்.ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது.
இதுஒருபுரம் இருக்க, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது உறவினரான கார்த்திகேயன் சந்தானம் அவர்களுடன் இணைந்து "ஸ்டோன் பெஞ்ச்" என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "அவியல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இந்த தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் வெளியான நல்ல பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். தற்பொழுது விஷால் நடித்து, ஹரி இயக்கி வரும் "ரத்னம்" திரைப்படத்தை தயாரித்து வருவதும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தான். இந்நிலையில் இன்று கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் "நீளிரா" என்கின்ற திரைப்படத்தை தங்களுடைய தயாரிப்பின் கீழ் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.
ஈழத் தமிழரான சோமீதரன் என்பவருடைய இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. நவீன் சந்திரா, கபிலா, வேணு என்று பல புது முகங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஈழத்தில் நடக்கும் போரை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை "Netflix" நிறுவனம் வாங்கிவிட்டது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
தொடர்ச்சியாக இந்த திரைப்படம் குறித்து பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஒரே ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக இந்த திரைப்படம் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
