Nabha Natesh: நடிகர் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் இணைந்தார் நடிகை நபா நடேஷ்!
நடிகை நபா நடேஷ், கையில் ஏற்பட்ட காயம் குணமடைந்து... தற்போது 'சுயம்பு' படத்தில் இணைந்துள்ள தகவலை படக்குழு அவரின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அறிவித்துள்ளது.
’கார்த்திகேயா 2’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பிரபலமடைந்த நிகில் தற்போது நடிக்கும் ’சுயம்பு’ திரைப்படம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாகும். பழம்பெரும் வீரராக நடிக்கும் சுயம்பு படத்தில் நடிகர் நிகில் தன் கதாபாத்திரத்திற்காக ஆயுதம், தற்காப்பு கலை, குதிரை சவாரி போன்றவற்றில் தீவிர பயிற்சி எடுத்துள்ளார். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் நடிகர் நிகிலின் இருபதாவது படமாகும். தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ் இந்த பான் இந்தியா படத்தை புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். ’சுயம்பு’ திரைப்படம் உயர்தர தொழில்நுட்ப மற்றும் அதிக தயாரிப்பு மதிப்புகளுடன் உருவாகிறது.
இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மேலும், அவர் தனது கதாபாத்திரத்திற்காக பயிற்சியும் எடுத்தார். இந்த நிலையில் இன்று படம் குறித்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு பெரிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளனர். கையில் காயம் அடைந்த நபா நடேஷ் நலமுடன் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
இந்த தலைசிறந்த படைப்பில் கதாநாயகிகளில் ஒருவராக அவர் நடிக்க இருப்பதை தெரிவித்து, படத்தில் அவரது தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், வெளியாகியுள்ள வீடியோவில் நபா காயம் குணமடைந்து படப்பிடிப்பில் இணைவதை அந்த வீடியோ காட்டுகிறது. கதாபாத்திரத்திற்காக நபா மாறியுள்ள விதம் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் புடவை மற்றும் நகைகளுடன் உண்மையான இளவரசி போலவே இருக்கிறார். வீடியோவில் அவரது தோற்றத்தை பார்த்து நடிகர் நிகிலும் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
படத்தில் நபா நடேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது போஸ்டரில் உள்ள அவரது கெட்டப்பில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது. மேலும், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ’கேஜிஎஃப்’ மற்றும் ’சலார்’ புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, எம் பிரபாஹரன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார் மற்றும் படத்திற்கான வசனங்களை வாசுதேவ் முனேப்பகரி எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.