வடிவேலுவை தொடர்ந்து ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ பட இயக்குனர் சுராஜுக்கும் கொரோனா - படக்குழு அதிர்ச்சி
நடிகர் வடிவேலு (Vadivelu) கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது இயக்குனர் சுராஜும் (Suraj) கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுராஜ். இவர் கடந்த 1998-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான மூவேந்தர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து தலைநகரம், மருதமலை, படிக்காதவன் என அடுத்தடுத்து ஹிட் படத்தை கொடுத்த சுராஜ், தற்போது வடிவேலு நாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ (Naaisekar Returns) படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. இதில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சாங் கம்போசிங் பணிக்காக நடிகர் வடிவேலு மற்றும் தயாரிப்பாளருடன் லண்டன் சென்றிருந்த இயக்குனர் சுராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். இதையடுத்து அவர்கள் மூவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் வடிவேலுவுக்கு (Vadivelu) தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். வடிவேலுவுடன் தொடர்பில் இருந்த இயக்குனர் சுராஜ் (Director Suraj) மற்றும் தயாரிப்பாளருக்கு லேசான அறிகுறி இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இயக்குனர் சுராஜுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.