கொரோனா பிடியில் சிக்கிய வடிவேலு.... எப்படி இருக்கிறார்? - உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த அமைச்சர்
வடிவேலுவுடன் (Vadivelu) தொடர்பில் இருந்த இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma Subramanian) தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு (vadivelu). இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு. சில ஆண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் தினந்தோறும் மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு (Vadivelu). சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
சுராஜ் (Suraj) இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பணிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பூஜையோடு துவங்கியது. பின்னர் சாங் கம்போசிங் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். அந்த பணிகளை முடித்துக்கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்த வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma Subramanian) கூறியதாவது: “நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. வடிவேலுவுக்கு முதல் நிலை அறிகுறியான S drop அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்" என அவர் கூறியுள்ளார்.