தியேட்டர்கள் திறப்பு எப்போது?... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி விளக்கம்!
திரையரங்கு உரிமையாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த வாரம் நடைபெறும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் நடைபெறும் ஆலோசனைக்கு பின்பு முடிவெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறையில் பல கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கிக் கிடக்கிறது. ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படாமல் காத்துக் கொண்டிருக்கின்றன. புதிய படங்களை வெளியிடுவதில் காலதாமதம் ஆவதால், சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் தங்களது படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
நாளை ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து நேரில் மனு கொடுத்துள்ளனர். அரசு கூறும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உறுதியாக பின்பற்றுவதாகவும், தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
திரையரங்கு உரிமையாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கை குறித்து இந்த வாரம் நடைபெறும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் நடைபெறும் ஆலோசனைக்கு பின்பு முடிவெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா முதல் அலையில் இருந்தே 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், சுமார் 1.500 கோடி ரூபாய் அளவிற்கு திரையரங்கு சார்ந்த வியாபாரம் நஷ்டம் அடைந்துள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.