Marathi Thriller Gondhal : 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியா சார்பில் போட்டியிட 'கோந்தல்' என்ற மராத்தி த்ரில்லர் படம் தேர்வாகியுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் போட்டியிட, இந்தியா சார்பில் 'கோந்தல்' (Gondhal) என்ற மராத்தி த்ரில்லர் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய திரைப்படக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இயக்குநர் பி. சேஷாத்ரி தலைமையிலான 14 பேர் கொண்ட தேர்வுக்குழு இந்தப் படத்தை தேர்வு செய்துள்ளது. இந்திய சினிமாவின் பல்வேறு துறைகள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

சந்தோஷ் தவாகர் இயக்கியுள்ள இந்த 'கோந்தல்' படத்தில் கிஷோர் கதம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர் மற்றும் அனுஜ் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம், ஆஸ்கர் பரிசீலனைக்கு வந்த பல படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் எடிட்டர்கள் இந்தத் தேர்வுக்குழுவில் இருந்தனர். ஆஸ்கர் ரேஸில் இந்தியா சார்பில் ஒரு மராத்திப் படம் களமிறங்குவது, மராத்தி சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா சார்பில் தேர்வான கோந்தல்

இந்த மகிழ்ச்சியான செய்தியைப் படக்குழுவினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இது இந்திய சினிமாவுக்கே ஒரு "பெருமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். "இந்திய சினிமாவுக்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்! 99வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 'கோந்தல்' படத்தை தேர்வு செய்த இந்திய அரசு, இந்திய திரைப்படக் கூட்டமைப்பு, தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்," என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வெற்றி படக்குழுவினரையே சேரும் என்றும் அவர்கள் நெகிழ்ந்துள்ளனர். "இந்தக் கனவை நனவாக்கிய ஒவ்வொரு கலைஞர், தொழில்நுட்பக் கலைஞர் மற்றும் கோந்தல் படக்குழுவினருக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். மகாராஷ்டிர மண்ணில் இருந்து உலக மேடைக்குச் செல்லும் கோந்தல், இந்தியாவின் ஆன்மாவை பெருமையுடன் சுமந்து செல்கிறது," எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

கிராமப்புற மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. பாரம்பரிய சடங்குகள், தனிப்பட்ட ஆசைகள் மற்றும் மனித உணர்வுகளுக்கு இடையிலான போராட்டத்தை இந்தப் படம் ஆழமாகப் பேசுகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, புனே சர்வதேச திரைப்பட விழா மற்றும் தேர்ட் ஐ ஆசிய சர்வதேச திரைப்பட விழா எனப் பல விழாக்களில் விருதுகளைக் குவித்த 'கோந்தல்' படத்துக்கு, தற்போது ஆஸ்கர் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்தப் படம் 2025ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.