Maanaadu: பிரச்சனை ஓவர்.... நாளைக்கு ‘மாநாடு’ இருக்கு - வெங்கட் பிரபுவின் அறிவிப்பால் குஷியான சிம்பு ரசிகர்கள்
தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை மாநாடு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர். அப்போது ரஜினியின் அண்ணாத்த படம் ரிலீசான காரணத்தால், நவம்பர் 25-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தன.
படம் நாளை வெளியாக இருந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இன்று மாலை, டுவிட்டரில் தீடீர் அறிவிப்பி ஒன்றை வெளியிட்டார். அதன்படி மாநாடு படத்தின் ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் ஷாக்கான ரசிகர்கள், எப்படியாவது நாளை படத்தை வெளியிடுமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து நாளை படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். அத்தோடு மாநாடு நாளை ரிலீசாகும் என குறிப்பிடப்பட்ட போஸ்டரையும் அவர் பதிவிட்டுள்ளார்.