பிளாஷ்பாக் : பெரியாரை அப்போ பிடிக்காது.. என் மனம் கவர்ந்த தலைவர் "அவர்" தான் - ஓப்பனாக பேசிய நடிகவேள் M.R ராதா
Nadigavel MR Radha : கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 43 ஆண்டுகளாக மிக சிறந்த நடிகராக பயணித்து, 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் அரங்கேறி அசத்திய ஒரு மாபெரும் நடிகர் தான் எம்.ஆர்.ராதா.
சென்னையில் 1907ம் ஆண்டு பிறந்து, தனது ஏழாவது வயதிலிருந்து நாடகங்களில் நடிக்க துவங்கியவர் தான் நடிகவேள் எம்.ஆர் ராதா. தொடக்கத்தில் ஜகந்நாத ஐயர் நாடகம் கம்பெனியில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்க துவங்கிய எம்.ஆர் ராதா அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் 3000 மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 1937 ஆம் ஆண்டு வெளியான "ராஜசேகரன் ஏமாந்த சோனகிரி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். 44 ஆண்டு காலங்கள் தமிழ் மொழியில் ஈடு இணையற்ற நடிகராக வலம் வந்த நடிகர் எம்.ஆர் ராதா அவர்கள் இறுதியாக 1980 ஆம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் "நான் போட்ட சவால்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே அவர் இறந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது. அவருடைய திரை உலக வாழ்க்கை பற்றி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், எனக்கு எழுத படிக்க தெரியாது. நான் பள்ளிகளுக்கு சென்றதில்லை, பெரிய பெரிய எழுத்துக்களை எழுத்துக்கூட்டி படித்து பழகியவன். எனக்கு உலக அனுபவம் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார்.
அவர் இளைஞனாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து வந்த காலத்தில் அவருக்கு மிகவும் பிடித்த தலைவர் பகத்சிங் தானாம். அன்றைய காலகட்டத்தில் அவருக்கு பெரிய அளவில் பெரியாரை பிடிக்காது என்றும் அதன் பிறகு அவரை மெல்ல மெல்ல படிக்க துவங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் இருந்து வந்த நடிகவேள் எம் ஆர் ராதா, அவர்கள் 1960 மற்றும் 70களின் காலகட்டத்திலேயே சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திருச்சியில் அவர் காலமானார்.