’இந்த உலகத்துல எதுவுமே சரியில்ல...’ புலம்பித்தள்ளும் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்..!
இவ்வுலகில் எதுவுமே சரியானது இல்லை. அப்படியிருக்க ஏன் ஒரு திரைப்படம் மட்டும் சரியில்லாததாக இருக்கக்கூடாது? என காப்பான் படத்திற்காக வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்.
காப்பான் விமர்சனம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’இன்று ரசிகர்கள் ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதைத் தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் முயற்சிகளைப் பாராட்டாமல் சில விமர்சகர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டவே நினைக்கின்றனர். ஒரு படம் பலதரப்பட்ட ரசிகர்களையும் திருப்தி படுத்த வேண்டும்.
இந்தக் காலத்தில் சாதாரணப் பொதுமக்கள் கூட விமர்சகர்களாகி விடுகிறார்கள். படங்களைத் தோண்டி துருவாமல் அவற்றை ரசிக்கத் தொடங்குவோம். தோல்விகளை மன்னிப்போம். இவ்வுலகில் எதுவுமே சரியானது இல்லை. அப்படியிருக்க ஏன் ஒரு திரைப்படம் மட்டும் சரியில்லாததாக இருக்கக்கூடாது? சுவாரஸ்யமான திரைக்கதைக்காவும், பல திருப்பங்களுக்காவும் நடிகர்களில் நல்ல நடிப்புக்காவும், இன்னும் பல விஷயங்களுக்காகவும், நான் காப்பானை மிகவும் ரசித்துப்பார்த்தேன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து விவகாரங்களையும் கொண்டிருக்கும் பிரதமருடைய அலுவலகத்தைப் பற்றி காட்ட வேண்டும் என்பதே கே.வி.ஆனந்தின் நோக்கம். ஒரு பிரதமருடைய பணி என்ன என்பதை ஒரு சதவிகிதமாவது காட்ட வேண்டும். பிரதமர் கதாபாத்திரத்தை மோகன்லால் அற்புதமாகச் செய்திருந்தார். சூர்யா ஒவ்வொரு பிரேமிலும் கச்சிதமாக இருக்கிறார். இதற்காக எப்படிப்பட்ட உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்பட்டிருக்கும்? வாழ்த்துகள் சார்.
ஆர்யாவும் மற்ற நடிகர்களும் கூலாக நடித்துள்ளனர். பார்க்க சீராகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது. காப்பன் அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் நல்ல படம். உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள். படத்தில் இருக்கும் தேசபக்தி தருணங்களை ரசியுங்கள்’’எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.