சந்திரபாபு நாயுடுவை வில்லனாகச் சித்தரிக்கும் ராம்கோபால் வர்மா படத்துக்கு எதிர்ப்பு...
இப்படத்தில் என்.டி.ராமராவின் மருமகனும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து கதை களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாதத்தின் முப்பது நாட்களும் யாரையாவது வம்புக்கு இழுத்து சண்டையும் சச்சரவுமாகவே வாழ விரும்புபவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுவரும் ’கதாநாயகடு’ படத்தைப் பகடி செய்து அவர் எடுத்துவரும் ‘லட்சுமி என்.டி.ஆர்’ படம் அவர் எதிர்பார்த்தபடியே பெரும் சர்ச்சையில் மாட்டியுள்ளது.
இந்தியில் கொஞ்சகாலம் கொடிகட்டிப் பறந்துவிட்டு மீண்டும் தெலுங்கு சினிமாவில் அளப்பறை கொடுத்துவரும் வர்மா, , ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சியை நிறுவிய என்.டி.ராமராவின் 2-வது மனைவி லட்சுமி சிவபார்வதி கதையை சினிமா படமாக எடுத்துள்ளார். அதற்கு லட்சுமியின் என்.டி.ஆர். என்று பெயர் சூட்டி உள்ளார். இப்படத்தில் என்.டி.ராமராவின் மருமகனும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து கதை களம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, இப்படத்துக்கு எதிராக தெலுங்கு தேசம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விஜயவாடாவில் உள்ள பிலிம்சேம்பர் அலுவலகம் முன்பு தெலுங்கு தேச கட்சி தலைவர் சாம்பசிவராவ் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு எதிராக கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினார்கள். அப்போது, ராம்கோபால் வர்மாவின் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கிடையே கர்னூல் எம்.எல்.ஏ. எஸ்.வி.மோகன் ரெட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் நற்பெயரை கெடுக்கும் விதமாக இயக்குனர் ராம்கோபால் வர்மா யூடியூப்பில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.