நிவேதா பெத்துராஜுக்காக பல கோடி செலவழித்த பிரபலம்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ - மனம் நொந்து நிவேதா போட்ட பதிவு!
Nivetha Pethuraj : பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னை பற்றி வெளியான ஒரு தகவல் குறித்து மனம் நொந்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
மதுரையில் பிறந்திருந்தாலும் தனது 11வது வயது முதல் துபாயில் வாழ்ந்து வரும் நடிகை தான் நிவேதா பெத்துராஜ். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "ஒரு நாள் கூத்து" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு "பொதுவாக என் மனசு தங்கம்" என்கின்ற திரைப்படத்தில் பிரபல அரசியல் தலைவரும், முன்னாள் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக கடந்த 8 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்து வரும் அவர் குறித்த தகவல்களை சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசிய பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் வெளியிட்டிருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது தீவிர ரசிகை ஒருவருக்கு துபாயில் 50 கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி கொடுத்திருப்பதாக கூறினார்.
அந்த ரசிகை வேறு யாருமல்ல நிவேதா பெத்துராஜ் என்றும் அந்த பேட்டியில் வெளிப்படையாகவே கூறினார். அவருடைய இந்த பேட்டி பெரிய சர்ச்சையாகிய நிலையில், இந்த விஷயம் குறித்து தற்பொழுது மனம் திறந்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட தனது எக்ஸ் பக்க பதிவில்.. "கடந்த சில நாட்களாக எனக்காக பெருந்தொகை செலவிடப்பட்டதாக ஒரு தவறான செய்தி வளம் வந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். முதலில் இது குறித்து பேச வேண்டாம் என்று அமைதியாக தான் இருந்தேன். ஆனால் ஒரு விஷயம் குறித்து பேசும் முன், அதன் உண்மை தன்மை அறியாமல், இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று எனக்கு தெரியவில்லை".
"இது கடந்த சில நாட்களாகவே எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை தருகிறது. தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். நான் மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்திலிருந்து வந்தவள். என்னுடைய 16வது வயது முதலிலேயே எனக்கான செலவுகளை நானே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னை என் பெற்றோர் வளர்த்தனர்".
"நாங்கள் கடந்த 20 ஆண்டு காலமாக துபாயில் தான் வசித்து வருகிறோம், இன்னும் அங்கு தான் வசித்துக்கொண்டிருக்கிறோம். திரைத்துறைக்கு நான் வந்த பொழுதும் கூட யாரிடமும் எந்த தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும் அல்லது ஹீரோவிடமும் நேரில் சென்று நான் வாய்ப்புகள் கேட்டதில்லை".
"நான் நடித்த 20க்கும் மேற்பட்ட படங்களும் என்னை தேடி வந்த வாய்ப்புகள் தான், துபாயில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். மேலும் இந்த விஷயத்தை நான் சட்டபூர்வமாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை, காரணம் பத்திரிக்கையாளர்களிடம் இன்னமும் கொஞ்சம் ஈரம் அவர்கள் மனதில் மீதம் இருக்கும் என்று நினைக்கிறேன்".
"தொடர்ச்சியாக என்னை குறித்த அவதூறான செய்திகளை அவர்கள் பரப்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் என்னை குறித்து சில செய்திகளை எழுதும் முன், அதனுடைய உண்மை தன்மையை அறிந்து எழுதுமாறு தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன். உண்மை என்றுமே வெல்லும்" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.