தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), அடுத்ததாக பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இவர் நடிப்பதோடு மட்டுமின்றி எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். இதுதவிர பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார். 

தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படம், பிச்சைக்காரன் பட இயக்குனர் சசியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 

இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டான் படம் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை தயாரிக்க கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் முனைப்பு காட்டி வருகிறதாம். இவர்கள் இருவரில் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.