நன்றி அறிக்கை வெளியிட்டார் கபிலன் வைரமுத்து...!
ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியின் பணியில் இருந்து விடைபெற்று தமிழ்த் திரையுலகில் முழு நேர எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பத்தோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பயணம் தொடங்கினேன். என் பயணத்திற்கு அர்த்தமுள்ள தொடக்கத்தைத் தந்திருக்கிறது 2017ஆம் ஆண்டு. நல்ல உள்ளங்கள் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
மெய்நிகரி என்ற என் நாவல், இயக்குநர் கே.வி.ஆனந்த் கவனத்தைக் கவர்ந்ததும் அதுவே ‘கவண்’ என்ற திரைப்படத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்ததும் நிறைவான ஆரம்பம். திலக் (விஜய் சேதுபதி), அப்துல் (விக்ராந்த்), மலர்(மடோனா), மயில்வாகனன் (டி.ஆர்) என்ற கதாபாத்திரங்களின் வழி நிகழ்காலத்தின் பல்வேறு குரல்களை நாங்கள் உருவாக்கிய பொழுதுகளும் அந்தக் கதாபாத்திரங்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதிய நாட்களும் மறக்க முடியாதவை. கே.வி.ஆனந்த்க்கும் மூத்த எழுத்தாளர்கள் சுபாவுக்கும் என் நன்றிகள்.
தல அஜித் நடித்த ‘விவேகம்’ ஒரு புதுமையான அனுபவம். சர்வதேச அதிரடிப்படை, அவர்களின் அதிநவீன செயல்பாடுகள்,உலகளாவிய அதிகாரச் சமூகம்,அணு ஆயுத பின்னணி, செயற்கை பூகம்பம் என முற்றிலும் மாறுபட்ட களம். இந்த கதைக்களம் தொடர்பான ஆராய்ச்சிக்கும், திரைக்கதை மற்றும் உரையாடலுக்கும் பங்களித்ததில் மகிழ்ச்சி. இனிய நண்பர் சிவாவுக்கு நன்றி.
இந்த ஆண்டு எழுதிய ஒரு சில பாடல்களில் “ஆக்சிஜன் தந்தாயே” மற்றும் “காதலாட காதலாட காத்திருந்தேனே” பாடல்கள் மனதிற்கு நெருக்கமானவை. பணமதிப்பிழப்பு (demonetization anthem) குறித்து நான் எழுதி நடிகர் சிம்பு பாடிய பாடல் இயல்பானதொரு பிரதிபலிப்பாக அமைந்தது. “தட்றோம் தூக்றோம்” என்ற படத்திற்காக இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறோம். பாடலில் இருப்பதுபோலவே படத்தின் வசனங்களிலும் சில எதார்த்தங்களைப் பதிவு செய்திருக்கிறேன். இன்று படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. அறிமுக இயக்குநர் அருள்க்கு நன்றியும் வாழ்த்தும்.
இளைஞர்களின் அரசியல் குறித்து நானும் என் நண்பர்களும் உருவாக்கிய “இளைஞர்கள் என்னும் நாம்” என்ற ஆவணப்படத்தை சமூகப் பயனுள்ள பதிவாகக் கருதுகிறேன். இதனை வெளியிட்டு சிறப்பித்த இயக்குநர் முருகதாஸ்க்கு மிகுந்த நன்றிகள்.
2017 ஆம் ஆண்டு தந்த படிப்பினைகளோடு புதிய பல படங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். என் எல்லா முயற்சிகளையும் அடையாளம் கண்டு அதை பாராட்டிய - ஆலோசனை சொன்ன - ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.