jothika natchiyaar movie review

எப்போதும் வித்தியாசமான படைப்புக்களை தேர்வு செய்து தன்னுடைய கைவண்ணத்தைக் காட்டும் இயக்குனர் பாலாவின் தரதப்படை படத்திற்கு பின் இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படம். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து, முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது என ரசிகர்கள் மனதை டச் செய்துள்ளார் பாலா.

பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஒரு நடுத்தரமான திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come backஐ ரசிகர்கள் ஓ போட்டு வரவேற்கின்றனர். 

ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. 

அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ... ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா... சொல்ல வைகிறது.

நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். இதுவரை கண்டிராத ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமிக்கும் அளவிற்கு உள்ளது திரைப்படம். சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். 

(பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா... ) என பல ரசிகர்கள் திரையரங்கிலேயே கோரிக்கை வைக்கின்றனர். ஒளிப்பதிவு பிரமாதம். முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. 

எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான். கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்... அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன்உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது. கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவின் படைப்பு அற்புதம்.