முதல்வர் ஜெ. தமிழக மக்களுக்கு எல்லாம் தாய் - நடிகை சரோஜாதேவி கண்ணீர் பேட்டி
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததை அறிந்ததும், மூத்த சினிமா நட்சத்திரங்கள் முதல் இன்றைய நட்சத்திரங்கள் வரை அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை சரோஜா தேவி கூறியதாவது, ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம். தமிழக மக்களுக்கு எல்லாம் தாய் போன்றவர். ஷூட்டிங்குக்கு வரும்போது தேவதை போல வருவார் ஜெயலலிதா.
என்னிடம் கன்னடத்தில் தான் பேசுவார். சிறு சிறு வேடங்களில் நடித்து உங்களை இறக்கிக் கொள்ளாதீர்கள் என்று கூறுவார். சிறைக்கு போய் விட்டு திரும்பியபோதும் அதே முகத்தோடு, புன்னகையோடு வந்தவர் ஜெயலலிதா. என்னென்ன கஷ்டம், அவமானத்தை அனுபவித்தாலும், அதை அப்படியே முறியடித்து வெற்றி கொடியை நாட்டி, வீரநடை போட்டவர் ஜெயலலிதா.
இவ்வாறு அவர் கூறினார்.