“ஆர் ஆர் ஆர்” படத்தில் வில்லனாக நடிக்கிறேனா?... உண்மையை உடைத்த பிரபல நடிகர்...!
சென்னை - 28, சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்த நிதின் சத்யா, இந்த தகவலை மறுத்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி தாறுமாறு வைரலானது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த படத்தில் தமிழ் நடிகரான நிதின் சத்யா வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை - 28, சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்த நிதின் சத்யா, இந்த தகவலை மறுத்துள்ளார். அந்த படத்தில் தான் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் போலி என சமீபத்தில் அளித்த பேட்டி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டமான “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.