Amitabh Bachchan : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது உடல்நிலை குறித்து எழுதியுள்ள ஒரு பிளாக் போஸ்ட், ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் ஐசியு, சர்ஜரி பற்றி குறிப்பிட்டிருந்தார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டாரும், கோடிக்கணக்கான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகருமான அமிதாப் பச்சன் எழுதிய ஒரு பிளாக் போஸ்ட், இப்போது ரசிகர்களிடையே பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. தனது பர்சனல் பிளாக்கில், மருத்துவமனை, ஐசியு, சர்ஜரி அனுபவங்கள் பற்றி அவர் எழுதியிருப்பதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம்.

பாலிவுட்டின் 'பிக் பி' என அழைக்கப்படும் 83 வயதான அமிதாப் பச்சன், தனது பிளாக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், மருத்துவமனையில் சர்ஜரி, ஐசியுவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கவனிப்பு, பிறகு வீட்டுக்குத் திரும்புவது என தன் அனுபவத்தை விவரித்துள்ளார். வாழ்க்கையின் மிகக் கடினமான கட்டங்களில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனாரா அமிதாப் பச்சன்?

உடல் வலியைத் தாண்டி, மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் இந்த நேரம் மிகவும் சவாலானது என்றும் அவர் கூறியுள்ளார். "ஒருநாள் நீங்கள் எல்லாரும் கொண்டாடும் சாம்பியனாக இருப்பீர்கள். அடுத்த நாளே தோல்வி உங்கள் முன் நிற்கும். அந்த நேரத்தில் சிலர் தைரியமாகப் போராடுவார்கள். இன்னும் சிலரோ சூழ்நிலையிடம் சரணடைந்துவிடுவார்கள். ஆனால், தைரியத்தை இழக்காதவர்கள்தான் உண்மையான சாம்பியன்கள்" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஆனால், அமிதாப் பச்சன் எந்தக் காரணத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்ன சர்ஜரி நடந்தது போன்ற விவரங்களைத் தனது பிளாக்கில் வெளியிடவில்லை. இது ரசிகர்களிடையே கவலையை இன்னும் அதிகரித்துள்ளது. அமிதாப்பின் பிளாக் போஸ்ட்டுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. ரசிகர்கள் பலரும், 'சீக்கிரம் குணமடையுங்கள்' என்று பதிவிட்டு வருகின்றனர்.

83 வயதிலும் அமிதாப் பச்சன் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து தனது பணிகளைச் செய்து வருகிறார். சினிமாவுடன் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். வயோதிகத்தால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொள்வது வழக்கம். பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' படத்தின் அடுத்த பாகத்திலும் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸ், கமல்ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில், ரஜினிகாந்த் உடன் இணைந்து வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். த.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமிதாப் பச்சன். அப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.