“மோடி ரசிகன் என்பதால் பாஜகவில் இணைகிறேன்”... சிவாஜி மகன் ராம்குமாரின் பளீச் பதிலடி...!
குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே நான் மோடியின் ரசிகன். அவரை நீண்ட வருடங்களாக கவனித்து வருகிறேன்.
காங்கிரஸ் கட்சி மீது அளவு கடந்த கொள்கை பிடிப்புடன் இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். காமராஜர், இந்திரா காந்தி ஆகியோரை பின்பற்றி காங்கிரஸில் பணியாற்றி வந்தார். இருவரும் மறைவுக்கு பின் கூடதமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிகட்சி ஆரம்பித்தாரோ தவிர, காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தியால் வேறு கட்சியில் இணையவில்லை. இந்நிலையில் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரும், அவருடைய மகன் துஷ்யந்தும் நாளை பாஜகவில் இணைய உள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்பு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை நடிகர் ராம்குமாரும், அவருடைய மகன் துஷ்யந்தும் சந்தித்தனர். நாளை தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராம்குமார், நாளை தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன் பாஜகவில் இணைய உள்ளேன். அரசியல் என்பது கரடுமுரடான பாதை, அதில் எதிர்ப்பு வருவது என்பது இயல்பான ஒன்று. பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநர் படத்தில் நடிக்கும் ஷாலினி... கம்பேக்கிற்காக காத்திருக்கும் தல ஃபேன்ஸ்!
மாநில கட்சிகளை விட்டு விட்டு ஏன் தேசிய கட்சியில் இணைகிறீர்கள் என்ற கேள்விக்கு, குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே நான் மோடியின் ரசிகன். அவரை நீண்ட வருடங்களாக கவனித்து வருகிறேன். குஜராத்திலும், பாஜகவிலும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதேபோல் நடிகர் பிரபுவுக்கு பாஜகவில் இணைவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் மகன் பாஜகவில் இணைவதா? என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய தெளிவான பதிலால் பதிலடி கொடுத்திருக்கிறார் ராம்குமார்.