ஆக்‌ஷன் ஹீரோ பிஜு 2 என்ற படத்தின் பெயரில் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிவின் பாலி மீதான விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Fraud case against actor Nivin Pauly : நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் மீதான மோசடி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஆக்‌ஷன் ஹீரோ பிஜு 2 என்ற படத்தின் பெயரில் இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில்தான் நிவின் பாலியும் அப்ரிட் ஷைனும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்றும், எர்ணாகுளம் துணை நீதிமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்கும்போதே, தலையோலப்பறம்பு காவல் நிலையத்தில் ஷம்னாஸ் அளித்த புகாரின் பேரில் தேவையின்றி வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் இருவரும் வாதிட்டனர். துணை நீதிமன்றம் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பே போலீசார் தேவையின்றி விசாரணை நடத்துவதாகவும் நிவின் பாலியும் அப்ரிட் ஷைனும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

ஷம்னாஸ் என்பவரின் புகாரின் பேரில் தலையோலப்பறம்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அப்ரிட் ஷைன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த மஹாவீரன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக ஷம்னாஸ் இருந்தார். மோசடி செய்து தன்னிடம் இருந்து 1.90 கோடி ரூபாய் பறித்துக்கொண்டதாக ஷம்னாஸ் புகார் அளித்துள்ளார். நிவின் பாலியை முதல் குற்றவாளியாகவும், அப்ரிட் ஷைனை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். படத் தயாரிப்பு தொடர்பான நிதிப் பிரச்சனையே இந்த வழக்கிற்கு அடிப்படை.

மஹாவீரன் படத் தயாரிப்பு தொடர்பாக தனக்கு 95 லட்சம் ரூபாய் வரை நிலுவைத் தொகை உள்ளதாகப் புகார்தாரர் தெரிவிக்கிறார். அப்ரிட் ஷைன் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு 2 படத்தில் தன்னை மற்றொரு தயாரிப்பாளராக சேர்த்துக் கொள்வதாக கூறி 1.90 கோடி ரூபாயை மீண்டும் பெற்றுக்கொண்டதாகவும் ஷம்னாஸ் புகாரில் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் தயாரான பிறகு மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதையடுத்து ஷம்னாஸின் தயாரிப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மறைத்து வைத்துக்கொண்டு படத்தின் வெளிநாட்டு உரிமையை விற்றதாகவும் ஷம்னாஸ் புகார் கூறுகிறார். 1.90 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி ஷம்னாஸ் புகார் அளித்துள்ளார்.