வடிவேலு, விவேக், உள்பட அவர்களின் குழுவினரும் ஒன்றாக இணைந்து காமெடி நடிகர் முத்துக்காளையின் திருமணத்தில் எடுத்த அரிதான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் செந்தில், கவுண்டமணிக்கு பிறகு மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட காமெடி நடிகர்கள் என்றால் அது விவேக்கும், வடிவேலுவும் தான். இவர்கள் இருவரும் 1990-ம் ஆண்டு முதல் தமிழ்சினிமா ரசிகர்களின் மனக்கவலையெல்லாம் போக்கும் விதமாக சிரிப்பு வைத்தியம் செய்து வந்தனர். இருவரும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதற்கு அவர்களது தனி தனி ஸ்டைல் தான் காரணம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வடிவேலு தனது உடல் மொழியால் எப்பேர்பட்டவரையும் சிரிக்க வைத்துவிடுவார். அதேபோல் விவேக் காமெடியிலும் சமூக கருத்தை சொல்லி பாடம் புகட்டி வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பெரியளவில் ஆக்டிவாக இல்லாதது தமிழ் சினிமாவில் காமெடி பஞ்சத்தை ஏற்படுத்தியது.

இதனை நிரப்ப சூரி, சதீஷ், யோகிபாபு, சந்தானம் ஆகியோர் முயன்றும் அவர்களது உயரத்தை எட்ட முடியவில்லை. வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் அவர் நடிக்காமல் இருந்து வந்தார். விவேக் கடந்தாண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறம் வடிவேலு மீண்டும் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது ஒரு ஆறுதல் தரும் விஷயமாக இருந்தது. தற்போது நாய் சேகர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.

வடிவேலுவும், விவேக்கும் திரைத்துறையில் ஜொலிக்க அவர்களது காமெடி குழுவும் முக்கிய காரணம். அதன்படி வடிவேலுவுடன் சிங்கமுத்து, போண்டா மணி, வெங்கல் ராவ் உள்பட சிலர் இருந்தனர். அதேபோல் விவேக் உடன் தாடி பாலாஜி, கொட்டாச்சி, மயில்சாமி, காதல் சுகுமார், செல் முருகன் என ஏராளமானோர் இருந்தனர்.

இந்நிலையில் வடிவேலு, விவேக், உள்பட அவர்களின் குழுவினரும் ஒன்றாக இணைந்து காமெடி நடிகர் முத்துக்காளையின் திருமணத்தில் எடுத்த அரிதான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் 90ஸ் கிட்ஸின் பேவரைட் காமெடியன்கள் அனைவரும் இருக்கிறார்கள், ஆனால் செந்தில், கவுண்டமணி மட்டும் மிஸ்சிங். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதில் உள்ள ஒவ்வொரு காமெடியன்களைப் பற்றிய தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.