கொரோனா தொற்றால் பிரபல கவிஞர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்...!
இந்நிலையில் இன்று ரஹத் இந்தோரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், புகழ் பெற்ற உருது கவிஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கடந்த 1997ம் ஆண்டு வெளியான இஷ்க், 2003ம் ஆண்டு வெளியான முன்னா பாய் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களில் ஹிட் படங்களை இயற்றியவர் கவிஞர் ரஹத் இந்தோரி.
உடல் நலக்குறைவு காரணமாக இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஹத் இந்தோரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து அவரே பதிவிட்டிருந்தார். அதில், நான் கொரோனா சோதனைக்காக அரவிந்தோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இந்த நோயை விரைவில் தோற்கடிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று ரஹத் இந்தோரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், 60 சதவீத நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.