சண்டையா? சமாதானமா?... ஈஸ்வரன் பட தயாரிப்பாளரின் அதிரடி முடிவால் எதிர்பார்ப்பில் சிம்பு ஃபேன்ஸ்!
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஈஸ்வரன் பட தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும் இந்த திரைப்படம், மற்ற வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இதற்கு எதிராக ஆடியோ ஒன்றை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஒரே நாளில் ஓடிடி, தியேட்டர் ரிலீசை அனுமதித்தால் பிற படங்களும் அதேபோல் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே ஈஸ்வரன் படத்தை தியேட்டர்களில் வெளியிட முடியாது என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திற்கு ஈஸ்வரன் பட தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. அதில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ் பட ஆர்வலர்கள் கண்டு ரசிப்பதற்காக, அந்த நாடுகளில் ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் நிலவுவதால், எங்களுடைய படங்களை பணம் கொடுத்து பார்க்கும் வசதியைக் கொண்ட olyflix- இல் வெளியிடலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது எங்கள் முடிவில் மாற்றம் செய்து மூன்று அல்லது நான்கு வாரத்திற்கு பிறகே இது போன்ற தளங்கள் வாயிலாக வெளி நாடுகளில் வெளியிடுவது என முடிவு எடுத்திருக்கிறோம். எனவே ஈஸ்வரன் படம் வெளியாகும் அன்றோ அல்லது அதன்பிறகு மூன்று வாரங்களுக்கு உள்ளோ எந்த விதமான ஓ.டி.டி. தளங்களிலும் வெளியாகாது என்று உறுதி கூறுகிறோம். எனவே திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்திற்கு நல்ல ஒத்துழைப்பினை நல்கி எங்கள் படம் வெற்றி அடைய உறுதுணை புரியுமாறு கேட்டு கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், ஈஸ்வரன் படத்திற்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சைகள் தீர்ந்து படம் திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.