இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் நடித்து வரும் சூர்யா, அறிமுக இயக்குநர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய் பீம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வக்கீல் கெட்டப்பில் இருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. படம் குறித்து பிரபல வார இதழுக்கு இயக்குநர் ஞானவேல் அளித்துள்ள பேட்டியில், ஒரு பழங்குடியினப் பெண்ணுக்குப் போலீசாரால் ஏற்படும் பிரச்சனையும், அதனை வழக்கறிஞர் சந்துரு ஒன்றரை ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தியுள்ளார். பழங்குடியினப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அதற்கு எதிரான சட்டப்போராட்டமும்தான் கதை என தெரிவித்துள்ளார். 

இதில் சூர்யா ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் சந்துரு உடையது என்பது தெரியவந்துள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். முதன் முறையாக சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. ஏற்கனவே சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் சூர்யா, தற்போது அது சம்பந்தமான படங்களையும் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.