96 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
96 Part 2 Hero Update : விஜய் சேதுபதியும் திரிஷாவும் முக்கிய வேடங்களில் நடித்து 2018-ல் வெளியான படம் '96'. தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பள்ளியில் படிக்கும் போது காதல் வயப்பட்ட ஜோடி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் உணர்வுப்பூர்வமான கதை தான் இந்த 96. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்த மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்தவர் பிரேம் குமார்.
இரண்டு ஹிட் கொடுத்த பிரேம் குமார்
96 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரேம் குமார் இயக்கத்தில் உருவான படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. இப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை விமர்சகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் வியந்து பாராட்டி இருந்தனர். மெய்யழகன் படம் ஹிட்டான பின்னர் தான் 96 படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்துவிட்டதாக கூறி இருந்தார் இயக்குனர் பிரேம் குமார்.

இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க மறுத்துவிட்டதாக அண்மையில் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது. அதுமட்டுமின்றி, விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனை 96 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் இயக்குனர் பிரேம் குமார், 96 இரண்டாம் பாகம் குறித்து பரவி வரும் தகவல்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
96 இரண்டாம் பாகம் குறித்து பிரேம் குமார் விளக்கம்
அதன்படி 96 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தான் பிரதீப் ரங்கநாதனை அணுகியதாக கூறப்படுவது உண்மையில்லை என்றும், 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து தான் அதை இரண்டாம் பாகத்தை எடுக்க முடியும் என கூறிய அவர், தான் பிரதீப் ரங்கநாதனை சந்தித்தது வேறு ஒரு கதைக்காக என விளக்கம் அளித்துள்ளார். அதற்கும் 96 இரண்டாம் பாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரேம் குமார்.
