முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் உள்ளிட்ட கிளாசிக் படங்களை இயக்கிய  டைரக்டர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80. 

இயக்குநர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் தேதி பிறந்தார். புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


மகேந்திரன், புதுமைப் பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப் பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாறிறில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

எம்ஜிஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.

முள்ளும் மலரும். உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள்., ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, ஊர்ப்பஞ்சாயத்து, சாசனம் உள்ளிட்ட 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இது தவிர 26 படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். இந்நிலையில் கடந்த வாரம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதையடுத்து கொளத்தூரில் உள்ள வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் மகேந்திரன் உயில் பிரிந்தது. இது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.