Ajith : "சர்ஜரிக்கு பின் எனக்கு என்ன ஆகும்னு தெரியல.. சோ.." அஜித் அனுபவித்த வேதனை - மனம் திறந்த சுந்தர் சி!
Thala Ajith Kumar : அரண்மனை 4 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்நிலையில் அஜித்துடன் தனக்கு ஏற்பட்ட நட்பு குறித்து சுந்தர் சி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், எழுத்தாளராகவும் தனது கலை பயணத்தை தொடங்கியவர் தான் சுந்தர் சி. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் கமர்சியல் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார் சுந்தர் சி என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் அவருடைய இயக்கத்தில் கடந்த மே 3ம் தேதி அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகம் உலக அளவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றது. துவண்டு கிடந்த கோலிவுட் சினிமாவிற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக அரண்மனை 4 திரைப்படம் திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் அவர்களின் "உன்னை தேடி" என்கின்ற திரைப்படத்தை இயக்கியது குறித்து தற்பொழுது மனம் திறந்துள்ளார் சுந்தர் சி.
"உன்னைத் தேடி திரைப்படத்திற்காக நானும் அஜித் மற்றும் அப்பட குழுவினரும் நியூசிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு 15 நாட்கள் நாங்கள் படபிடிப்பில் ஈடுபட முதலில் பிளான் செய்திருந்தோம். ஆனால் அஜித் என்னிடம் வந்து இந்த ஷூட்டிங்கை ஏழு நாட்களில் முடித்து தர முடியுமா? ஏனென்றால் எனக்கு மீண்டும் இந்தியா சென்று ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது".
"அதை மிகவும் கைதேர்ந்த ஒரு மருத்துவர் செய்யவிருக்கிறார். அவர் விரைவில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் விரைந்து இந்த ஆபரேஷனை அவர் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஆகையால் ஏழு நாட்களில் நீங்கள் சூட்டிங்கை முடித்து விட்டால், எட்டாவது நாள் நான் இந்தியா சென்று, அந்த ஆபரேஷனை செய்து கொள்வேன்".
"மேலும் அந்த ஆபரேஷனுக்கு பிறகு நான் எழுந்து நடமாடுவேனா, அல்லது நடைப்பிணமாக படுத்த படுக்கையாகி விடுவேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆகவே என்னை வைத்து எடுக்க வேண்டிய அனைத்து காட்சிகளையும் எடுத்து முடித்து விடுங்கள் என்று கூறினார். அந்த படத்தில் நடிக்கும் பொழுது பல கடினமான காட்சிகள் அவருக்கு இருந்தது".
"ஆனால் புன்னகைத்த முகத்தோடு அவை அனைத்தையும் அவர் நடித்து முடித்தார். அன்று அவ்வளவு தூரம் கஷ்டப்பட்ட அவர்தான் இன்று அனைவராலும் தல என்று போற்றப்படுகிறார். அவர் உழைப்பில் மிகச்சிறந்த ஒரு மனிதர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்" என்று அஜித்திற்கு புகழாரம் சூட்டினார் சுந்தர் சி.