‘டிமாண்டி காலனி 2’வில் நான் இருக்கேன்... ஆனா இயக்கப்போவதில்லை - திடீர் டுவிஸ்ட் கொடுத்த அஜய் ஞானமுத்து
Demonte colony 2 : டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்துள்ள அஜய் ஞானமுத்து, அப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வித்தியாசமான கதையம்சத்துடன் திகில் படமாக உருவாகியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது.
இதையடுத்து இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார் அஜ்ய் ஞானமுத்து. நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார் அஜய். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.
இதையடுத்து விக்ரம் உடன் கூட்டணி அமைத்த அஜய் ஞானமுத்து, அவரை வைத்து கோப்ரா என்கிற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து. அருள்நிதி நடிக்க உள்ள இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை கவனிக்கும் அஜய், இதன்மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் வெங்கி வேணுகோபால் இயக்க உள்ளார். இவர் கோப்ரா படத்தில் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.
இதையும் படியுங்கள்... கார்த்தியின் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்க உள்ள விருமன் படக்குழு - வெளியான மாஸ் அப்டேட்