’நான் அவ்வளவு நல்லவன் இல்ல’...’துள்ளுவதோ இளமையின் 17 ஆண்டுகால நினைகளை அசைபோடும் தனுஷ்...
’துள்ளுவதோ இளமை’ ரிலீஸாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தனது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
’துள்ளுவதோ இளமை’ ரிலீஸாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி தனது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
2002ல் தனது 19 வயது அறிமுகமான தனுஷ் ‘அசுரன்’யும் சேர்த்து இதுவரை 43 படங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘ரஞ்சானா’, ‘ஷமிதாப்’ என்ற இரு ஹிந்திப்படங்களும் ‘த எக்ஸ்ட்ராடினரி லைஃப் ஆஃப் ஃபகிர்’ என்ற ஃப்ரெஞ்சு மொழிப் படமும் அடக்கம். வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
’துள்ளுவதோ இளமை’யின் 17 வது நிறைவை ஒட்டி இன்று காலை முதலே ட்விட்டர் உட்பட்ட வலைதளப்பக்கங்களில் வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில் ரசிகர்களுக்கு உணர்ச்சிகரமாக ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் தனுஷ். அக்கடிதத்தில்...என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ‘துள்ளுவதோ இளமை’ வெளியாகி அதற்குள் 17 ஆண்டுகள் ஓடிவிட்டதா?
எல்லாமே நேற்று நடந்தது போல் இருக்கிறது. நடிப்பு என்றாலே என்ன என்று தெரியாமல் வந்த ஒரு சின்னப் பையனை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்டீர்கள். என் வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருந்து தோள் கொடுத்தீர்கள். என் இதயம் உங்களுக்குச் செலுத்தவேண்டிய நன்றியால் நிரம்பி வழிகிறது. இந்த 17ம் ஆண்டு நிறைவுக்கு வலைதளங்களில் நீங்கள் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச்செய்தி மற்றும் வீடியோக்களால் திக்குமுக்காடிவிட்டேன்.
நன்றி. மிக்க நன்றி. நான் ஒன்றும் அவ்வளவு சரியான நபர் அல்ல. ஆனால் நீங்கள் செலுத்தும் அளவு கடந்த அன்பால் என்னை இன்னும் கொஞ்சம் சரி செய்துகொண்டு பயணிக்க முயல்கிறேன்’என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தனுஷ்.